அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

🕔 February 6, 2023

– அஷ்ரப் ஏ சமத் –

கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நாளை மறுதினம் 08ஆம் திகதி நடத்தவுள்ளதாக இலங்கை சுத்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தேசபந்து லெஸ்லி தேவேந்திரா தெரிவித்தார்

இலங்கை சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தின்ராஜகிரியவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.

“இலங்கையில் தற்போதைய காலகட்டத்தில்  என்றுமில்லாதவாறு, பொது மக்கள் மீது – பாரிய வரிகளை அரசாங்கம்  சுமத்தியுள்ளது. இதனால் மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு துன்பங்களையும் அவலங்களையும்  எதிர்நோக்குகின்றனர். 

மின்சார சபை தமது வாடிக்கையாளர்கள் மீது நூற்றுக்கு 70 வீத்திலிருந்து 200 வீதம் வரை மின்சாரக் கட்டனத்தினை அதிகரித்துள்ளது. அதேபோன்றுதான் நீர்விநியோகம், பெற்றோலியம், சமயல் எரிவாயு போன்ற அத்தியவசியப் பொருட்களுக்கும் நாளுக்கு நாள் வரியும் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் இந்த நாட்டில் வாழமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையத்தில் எமது நாட்டு விமானங்கள் வேறு ஒரு நாட்டுக்கு சென்று பிரயாணிகளை ஏற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் வேறு நாட்டு விமானங்கள் எமது நாட்டு பிரயாணிகளை எந்த வித வரியும் இன்றி ஏற்றிச் செல்கின்றது.

இதனால்  பாரிய விமானப் பயணங்களை வேறு நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளதால் – எமக்கு பாரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சார சபையை பல்வேறு நாடுகளுக்கும் விற்று, அவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுக் கொள்ளவே – பாரிய கட்டண அதிகரிப்பினை மக்கள் தலைமீது சுமத்தியுள்ளனர்.  

இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு – ஓய்வு பெற்ற இரண்டு பொது முகாமையாளர்கள் இருவர் ஆலோசகர்களாக உள்ளனர். இவர்கள்  மாதாந்தம் 06 லட்சம் ருபா சம்பளம் பெறுகின்றனர்.

ஆகவேதான் தொழிற்சங்கங்கள்  அரசா்ங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கே ஒன்றினையவுள்ளளோம்.  இந்த  நாட்டில் உள்ள சகல அதிகார சபைகள், கூட்டுத்தாபனங்களது சுதந்திர தொழிலாளர்கள் சங்கங்கள் – பெப்ரவரி 08ஆம் திகதி புறக்கோட்டையில் பாரிய தொழிற்சங்க போராட்டமொன்றை நடத்தவுள்ளோம்” என, அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்