தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் விசாரணை: நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது

🕔 January 29, 2023

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த – நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர்.

இதன்படி முதலில் தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு அவருக்கும் தொலைபேசி மூலம் – உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முறைப்பாடளித்துள்ளார்.

ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களான எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோருக்கு ஒரே தொலைபேசி இலக்கத்தில் இருந்தே உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதனிடையே ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பி வைத்த கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இரண்டு நாட்களில் அஞ்சல் மூல வாக்களிப்பை நடத்த உத்தேசித்துள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பெறப்பட்ட வேட்புமனுக்கள் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்காக அரச அச்சக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முன்னதாகவே இது தொடர்பான அச்சுப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்