பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

🕔 January 29, 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் – இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

“பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கைகளும், அவரை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகையும் தற்போது தயாரிக்கப்பட்டுவிட்டன.

இதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஜனக ரத்நாயக்க என்ற நபரே இந்த மின்சாரத் தடைக்குக் காரணமானவர். வேறு யாரும் இல்லை.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை தவறாக வழிநடத்தி அவர்களின் அனுமதியின்றி வேலைகளை செய்து – இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளனர்” என்றார்.

நாட்டில் உயர்தரப் பரீட்சை நடக்கும் காலப்பகுதியில் மின்சாரத் தடையை அமுல்படுத்த வேண்டாம் என்றும், அதனை நடைமுறைப்படுத்தாக மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ள நிலையிலேயே, அவரை பதவி நீக்கவுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்