யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் ராஜிநாமா: வரவு – செலவுத் திட்ட தோல்விக்கு பின்னரான முடிவு

🕔 December 30, 2022

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 07 மேலதிக வாக்குகளால் கடந்த 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்பது நாட்களுக்கு பின்னர் மாநகர மேயர் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக தெரியவருகிறது.

2020 டிசம்பர் 30 இல் மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் அந்தப் பதவிக்குத் தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம் மாநகர சபையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிலையில் நாளை 31ஆம் திகதியுடன் மேயர் மணிவண்ணன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்