மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர்

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில், ஊடகமொன்று கருத்துக் கேட்டபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
“யாரின் கோரிக்கைகளுக்காகவோ, தீர்மானங்களுக்காகவோ நாட்டின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது. எனினும், மரண தண்டனை குறித்து இந்த விவாதங்களின் போது தீர்மானம் எதனையும் எடுக்க முடியவில்லை.
மரண தண்டனையை அமுல்படுத்தி வரும் நாடுகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு தடவை தற்காலிக அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்ய, ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் நடைமுறையொன்று காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, இலங்கையும் ஆதரவாக வாக்களித்துள்ளது.
எனவே, இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படாது.
சட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் நிறைவேற்றல் ஆகியனவற்றின் முழு அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கே காணப்படுகின்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சட்டவாக்கம் தொடர்பில் அதிகாரங்கள் கிடையாது” என்றார்