இடைக்கால வரவு – செலவுத் திட்டம்; சபையில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது: பாதுகாப்புக்கும் அதிக நிதி ஒருக்கீடு
இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை இன்று (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார.
4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதனையடுத்து, பிற்பகல் 02 மணிவரை நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி உரையாற்றுவார்.
அதனையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன், இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை (31) முதல் எதிர்வரும் 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 02 ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளது.
இந்த விவாதத்தை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடைவேளையின்றி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக இன்று சமர்ப்பிக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 04 மாதங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் சமர்ப்பிக்கப்படுகிறது.
திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது பொதுநிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது. அதற்காக 735 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டு அமைச்சுக்கு 467 பில்லியன் ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 376 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் மொத்த செலவீனமானது 3,899 பில்லியன் ரூபாவாகும்.
இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில், 773 பில்லியன் ரூபா மேலதிக செலவாக சேர்க்கப்பட்டுள்ளது.