தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக டலஸ் குற்றச்சாட்டு
தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
‘அத தெரண’வுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய அவர், தனது கையடக்கத் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதை பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றார்.
நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளை சிரேஷ்ட ஆலோசகர் பதவிகளுக்கு நியமிப்பதாகவே – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதுவரையான சீர்திருத்தங்கள் தெரிகிறது எனவும் அவர் கூறினார்.
உறுதியளித்தபடி ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பதிலாக ஜனாதிபதி இவ்வாறான சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகவும் டலஸ் குறிப்பிட்டுள்ளார்.
“தனக்கு வாக்களித்த எம்.பி.க்களை ஆறுதல்படுத்துவதும், நிராகரிக்கப்பட்ட தனது கட்சிக் கூட்டாளிகளுக்கு வெகுமதி அளிப்பதும் அதே பழைய இழிவான முறையின் தொடர்ச்சியாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் 08வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நியமிப்பதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார்.