ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை, விற்க முயன்ற மூவர் கைது
கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட 40 தங்க முலாம் பூசப்பட்ட செப்பு உருண்டைகளைத் திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததன் பின்னர், சந்தேகநபர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த செப்பு உருண்டைகளை பழைய உலோகமாக விற்பனை செய்ய முற்பட்ட இவர்கள், நேற்று (24) வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28, 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் ராஜபகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையில் அவர்கள் போதைக்கு அடிமையாகியவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழுவிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.