ஜனாதிபதியின் உத்தரவில், பறிபோகிறது ஹிருணிகாவின் வீடு
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டினை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிருணிகாவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டதையடுத்து, அவரின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்த ஹிருணிக்காவின் தந்தையான, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர, கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
அதனையடுத்து, அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசினால், ஹிருணிக்காவின் தாய் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொழும்பு 07 இல் வீடொன்று வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் பாதுகாப்புக்கென விஷேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஹிருணிகாவின் குடும்பத்தினர் இன்னும் அந்த வீட்டிலேயே உள்ளனர்.
இந்நிலையிலேயே, அவர்கள் அங்கிருந்து வெளியேறி, அந்த விட்டை அரசிற்கு மீண்டும் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிருணிக்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவானதன் பின்னர் அங்கிருந்த காலத்திற்குரிய வீட்டு வாடகையையும் அரசிற்கு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்திரவிட்டுள்ளாதாகத் தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா, இளைஞர் ஒருவரைக் கடத்தியதாக குற்றச்சாட்டொன்று எழுந்துள்ள நிலையிலேயே, அவரின் குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடு மீளப்பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.