ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கொழும்பு பேராயர் பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று (07) கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது உரையாற்றிய பேராயர் மல்கம் ரஞ்சித்; ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய தகவல்களை சேகரிக்க இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு ஐநா மனித உரிமைகள் பேரவையை வேண்டிக்கொண்டார்.
“பயங்கரமான தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்று உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் இன்னும் இருளில் இருக்கிறோம். ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து மேலும் முக்கிய தகவல்களைச் சேகரிப்பதற்கும் உறுதி செய்வதற்கும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை வேண்டுகிறோம்” என்றும் இதன்போது பேராயர் கூறினார்.
“தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியை வழங்கத் தவறியதால், அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆரம்பத்தில் இந்த தாக்குதல் சில இஸ்லாமிய இளைஞர்களின் வேலை என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இது பெரிய அரசியல் சதியின் ஒரு பகுதியாக இருப்பதாக நாங்கள் இப்போது சந்தேகிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.