சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம்

🕔 December 27, 2021

லங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பைச் செய்வதற்கு சீனாவும் ரஷ்யாவும் முயற்சித்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு டிசம்பர் மாதமும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் நிதி அமைப்பான ஐந்தாவது குழுவில், ஐக்கிய நாடுகளின் பாதீடு தொடர்பான இணக்கப்பாடு குறித்து விவாதிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறுவப்பட்ட பல முக்கியமான விசாரணைப் பொறிமுறைகள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளன.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் விவகாரங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில், அறிக்கை ஒன்றின் மூலம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே சீனாவும், ரஷ்யாவும் மனித உரிமைகள் தொடர்பான பல நிதி ஒதுக்கத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருவதாக, தகவல்களை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பாதீட்டுத் திட்டத்தில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பை செய்வதற்காக, சீனா மற்றும் ரஷ்யா முதலான பாதுகாப்புச் சபை உறுப்புரிமை நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனித உரிமைகள்சார் செயற்திட்டங்களுக்கு உரியவாறு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளிடம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்