டொலர் நெருக்கடி: வெளிநாடுகளிலுள்ள மூன்று தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்
இலங்கைக்கான மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
செலவீனங்களைக் குறைப்பதன் ஊடாக அமெரிக்க டொலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையான இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், நைஜீரியாவில் உள்ள தூதரகம், சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவை மூடப்படவுள்ளன.
பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகத்தின் செயல்பாடுகள் பேர்லினுக்கு மாற்றப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் நைஜீரியாவில் தூதரகப் பணிகளைத் தொடர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலம்ட சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகமும் மூடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“இது செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இவ்வாறான நடைமுறையை மற்றைய அமைச்சுக்களுகம் இப்போது பின்பற்றுகின்றன” என்றும் அமைச்சர் விளக்கினார்.
இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடிக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை திங்கட்கிழமை கலந்துரையாடியதாகவும் மேற்படி ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கையின் அவசரத் தேவையான அமெரிக்க டொலர்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது செலவீனங்களைக் குறைக்கும் அமைச்சுக்களின் முயற்சிகளை நிதியமைச்சர் பாராட்டினார்.
இந்த முயற்சியால் அரசுக்கு பெரும் சேமிப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவும் வகையில், அனைத்து அமைச்சுக்களினதும் தொடர்ச்சியான ஆதரவையும் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.