காரைதீவு பிரதேச சபை அமர்வில் கூச்சல், குழப்பம்: இடைநடுவில் தவிசாளர் தப்பியோடியதாக உறுப்பினர்கள் தகவல்

🕔 August 23, 2021

– நூருல் ஹுதா உமர் –

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரின் வாகனத்திற்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் கொண்டுவந்த பிரேரணை பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் வெற்றி பெற்றுள்ளது.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தனர்.

சபைக்கு போதியளவு வருமானம் இல்லாமையினாலும், மக்களின் வரிப்பணம் வீணாக புகையாகிக் கொண்டிருப்பதனாலும், சிறிய பரப்பளவை கொண்ட காரைதீவு பிரதேச சபை எல்லையினுள் 500 லீட்டர் எரிபொருள் என்பது கூடுதலான தொகை என்பதனாலும் காரைதீவு தவிசாளரின் வாகனத்துக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு மேற்படி பிரேரணை கொண்டு வரப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் இன்று (23) காலை சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த பிரேரணை அடங்கலாக பல்வேறு பிரேரணைகள் இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் சபை அமர்வை 15 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பணித்ததாக கூறி, விரைவாக சபையமர்வை முடிக்க தவிசாளர் முயற்சித்தார்.

இதன்போது பிரேரணைகளை ஒத்திவைக்க கோரிய உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீருக்கும் தவிசாளருக்குமிடையே வாய்த்தர்க்கம் உண்டானதாகவும் அதன்பிரகாரம் திண்மக்கழிவகற்றும் ஊழியரை கொண்டு பஸ்மீரை சபையை விட்டு வெளியேற்ற தவிசாளர் பணித்தபோது, சபை அமர்வில் கூச்சல் குழப்பம் உண்டானதாகவும் நீண்ட குழப்பத்தின் பின்னர் சபை சுமூக நிலையை அடைந்ததாகவும் ஊடகங்களிடம் உறுப்பினர்கள் கூறினர்.

இதனையடுத்து காரைதீவு தவிசாளரின் வாகனத்துக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் 500 லீட்டர் எனும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என உறுப்பினர் பஸ்மீர் கொண்டு வந்த பிரேரணை, உப தவிசாளர் ஜாஹீர் வழிமொழிந்தார். ஆயினும் தவிசாளர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

யாருக்கும் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்படாமல் நேரடியாக வாக்களிப்புக்கு சென்றதாகக் கூறி, பிரேரணையை எதிர்த்து தவிசாளர் ஜெயசிறில் உட்பட ஐவர் வாக்களித்தனர்.

பிரேரணையை ஆதரித்து உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முஸ்தபா ஜலீல், சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர், மு.கா உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், சுயேட்சை உறுப்பினர் க. குமாரஸ்ரீ, சுதந்திர காட்சி உறுப்பினர் ஜெகன் ஆகியோர் வாக்களித்தனர்.

மு.கா உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் தனக்கு கருத்து கூற வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, நடுநிலை வகிப்பதாக அறிவித்தார்.

இதன் மூலம் ஒரு மேலதிக வாக்கினால் பிரேரணை வெற்றிபெற்று, தவிசாளரின் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டது.

வாகன சாரதிக்கான மேலதிக நேர கொடுப்பனவு சம்பந்தமான பிரேரணை, கடந்த மாத கணக்கறிக்கை என்பனவற்றுக்கும் பதிலளிக்காமல் – சபை அமர்வில் உறுப்பினர்களின் சரமாரியான கேள்விகளினால் ஏற்பட்ட அசாதாரண நிலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தவிசாளர், இடைநடுவில் சபை அமர்வை கைவிட்டு தப்பியோடினார் என்று, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது உபதவிசாளர் ஏ.எம். ஜாஹீர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். பஸ்மீர், முஸ்தபா ஜலீல் ஆகியோர் தெரிவித்தனர்.

முகம்மது நபியை நிந்தித்து எழுதப்பட்ட பதிவு ஒன்றை, அண்மையில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தமையும், அதற்கு எதிராக பல்வேறு நபர்கள் பொலிஸ் நிலையத்தல் புகார் அளித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

தொடர்பான செய்தி: முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்