தனது அமைச்சின் கீழிருந்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர விளக்கம்
![](https://puthithu.com/wp-content/uploads/2021/03/Sarath-Weerasekera-98.jpg)
தனது அமைச்சின் கீழிருந்த இரண்டு திணைக்களங்களை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு அறிவித்திருந்தார் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகமொன்றிடம் பேசிய அவர்; குறித்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை என்றும், திணைக்களங்களை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்நோக்கு திணைக்களம் ஆகியவற்றின் முழுமையான ஆதரவை தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களுக்காக ஜனாதிபதி பெற்றுக் கொள்வதற்காகவே, அவற்றை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு எந்தவித கவலையுமில்லை. நல்ல காரணங்களுக்காகவே அவை நீக்கப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தற்போது அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ், பொலிஸ் திணைக்களம் மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவை மட்டுமே உள்ளன.
தொடர்பாக செய்தி: சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா