தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் ப்ரஸ் பேல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலிசிட்டர் நாயகம் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், சந்தேக நபர்களான கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோரை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.