றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

🕔 April 27, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 27 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்து வந்தனர்.

ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் கொழும்பு –டிபௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அவரின் வீட்டில் வைத்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறப்பட்டிருந்தது.

குறித்த காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மீண்டும் 90 நாட்களுக்கான தடுப்பு காவல் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்