நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்: சினிமா வாய்ப்பு இல்லாததால் பரோட்டா மாஸ்டராக மாறிய கலைஞன்
தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் குணச்சித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலணானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா – 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை ராஜாஜி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில், சிரேஷ்ட வைத்தியர்கள் வரும் முன்பே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை தீப்பட்டி கணேசனின் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்திருந்தபோதும், தீப்பெட்டி கணேசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வறுமை நிலையில் இருந்த அவரது வாழ்க்கை, கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மேலும் மோசம் அடைந்தது.
இதனால் தனக்குத் தெரிந்த பரோட்டா மாஸ்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார் கணேசன். சிறு, சிறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்த அவரது நிலையை அறிந்து, திரைப்பட பாடலாசிரியர் சினேகன், நடிகர் விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.
நடிகர் விஷால் சமீபத்தில் அவரது குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான்களை அனுப்பி வைத்திருந்தார்.
தீப்பெட்டி கணேசனின் நிஜ பெயர் கார்த்திக். அந்த பெயரைச் சொல்லி தன்னை அழைத்தவர் நடிகர் அஜித் மட்டுமே என ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் தீப்பட்டி கணேசன் பகிர்ந்து கொண்டிருந்தார். இதனால் தன் மீது பாசமாக உள்ள அஜித்தை நேரில் பார்த்து அவரிடம் உதவி கேட்க பல முறை முயன்றும் அது நடக்கவில்லை என வேறொரு பேட்டியில் தீப்பட்டி கணேசன் கூறியிருந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் தீப்பட்டி கணேசனை தொடர்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது குழந்தைகளின் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார்.