‘கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்’ என பிரதமர் கூறவில்லை; அவ்வாறான செய்தி பொய்யானவை: பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவிப்பு
கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என, பிரதமரின் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்ததாக ‘த லீடர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா என, மேற்படி பிரதமர் அலுவலக அதிகாரியிடம் ‘த லீடர்’ வினவிய போதே, அவர் இவ்வாறு பதிலளித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பபிடப்பட்டுள்ளது.
“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு, ‘அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்றுதான் பிரதமர் பதிலளித்தார். அதைவிடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதாக பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிடவில்லை” என்று பிரதமர் அலுவலக சிரேஷ்ட அதிகாரி தொடர்ந்த பதிலளித்ததாகவும், ‘த லீடர்’ தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பிரதமரின் இந்த அறிவிப்பை அடுத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இன்ரான்கான் ஆகியோரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
‘த லீடர்’ வெளியிட்டுள்ள செய்தி: කොවිඩ් මෘතදේහ භූමදානය ඉඩ දෙන කතාවක් අගමැති කියලා නැහැ