இம்ரான்கான் வருகை, முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்: பிரதி உயரிஸ்தானிகரிடம் றிசாட் குழுவினர் கோரிக்கை

🕔 February 9, 2021

லங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டி அவர்களை இன்று (09) சந்தித்த இக்குழுவினர், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்குவாரங்கள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துக் கூறினர்.

இதுபற்றி கட்சியின் தவிசாளர் அமீர் அலி தெரிவிக்கையில்;

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டலுக்கு இணங்க, உலகத்தின் 190 நாடுகள் கொவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களுடைய உடல்களை அடக்கம் செய்கின்றன. மாறாக, இலங்கையில் மாத்திரம் கடும்போக்கு கொள்கையுடன், இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக, எமது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து வருகின்றது. இது தொடர்பில், எமக்கு நியாயம் பெற்றுத்தர பாக்கிஸ்தான் பிரதமரது விஜயம் உதவ வேண்டும்.

அத்துடன், இலங்கையிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை, அவர் வலியுறுத்த வேண்டும் என்பதுவும் எமது எதிர்பார்ப்பாகும்” என்றார்.

அத்துடன், இலங்கைக்கு பாகிஸ்தான் செய்து வருகின்ற நல்ல பல உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். மேலும், இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமருடன், தாங்கள் சந்தித்துப் பேசி, தமது கருத்துக்களை தெரியப்படுத்த, ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் குழுவினர் இச்சந்திப்பின் போது கூறினர்.

இச்சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ். சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் உடனிருந்தனர்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்