பெரும்பான்மையினருக்கானதாக, சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அசாத் சாலி குற்றச்சாட்டு

🕔 February 4, 2021

சுதந்திரத்தின் சுவாசக் காற்றை சகல சமூகங்களும் நுகரும் வரைக்கும், இன்றைய தினத்தின் யதார்த்தங்களை உணர்வதில், சிறுபான்மை சமூகங்கள் சிரமப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று (04ஆம் திகதி) கொண்டாடப்படும் நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

‘அந்நிய அடக்கு முறைகளிலிருந்து தாய் நாட்டை விடுவிக்கும் சுதந்திர போராட்டத்தில் சிங்கள, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க தலைவர்கள் உழைத்த உண்மையை எவரும் மறைக்க முடியாது. ஆனால், அரசாங்கத்தின் இன்றைய செயற்பாடுகள் இந்த உண்மைகளை மறைக்கும் வகையில் உள்ளமைதான் கடுங்கவலையானது.

அரசியல், சமூக, மத சுதந்திரங்கள் மாத்திரமன்றி இருப்புக்களை இழக்கும் சூழ்நிலையுமே இன்று சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவை, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடந்தாலும் பரவாயில்லை. பழிவாங்கலுக்காக திட்டமிட்டு நடத்தப்படுவதுதான் கவலை.

எல்லோருக்கும் உரித்தான நாட்டின் சுதந்திரம், பெரும்பான்மை சமூகத்துக்கும், அவர்களது மதத்துக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்டது மாத்திரமல்ல, ஏனைய மதங்களை மலினப்படுத்தியும் உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதி முறைகளையும் மீறி, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது கூட – மலினப்படுத்தும் மன நிலைகள்தான். இந்நிலையில், முஸ்லிம்களின் மனநிலை அரசாங்கத்துக்குச் சார்பாக எப்படித் திரும்புவது? விருப்பம் என்பது, பலாத்காரமாக வருவதல்ல. விளங்கி, புரிந்து ஏற்படுவதுதான் விருப்பமாகும்.

இந்த அரசாங்கத்தின் மன விகாரங்களை விளங்கியுள்ள முஸ்லிம்கள், சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் ஒதுங்கியிருப்பதே சிறந்தது. இவ்வாறு ஒதுங்கியிருந்தாலும் நமது நாட்டுப்பற்றுக்களை வேறு வடிவில் வெளிப்படுத்த தவறவிடக் கூடாது’ என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்