கொவிட் தடுப்பு மருந்து: 03 லட்சம் சொட்டுக்களை இலங்கைக்கு சீனா வழங்குகிறது
இலங்கைக்கு கொவிட் தடுப்பு மருந்தை சீனா அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கிணங்க 03 லட்சம் சொட்டு மருந்தை சீனா வழங்கவுள்ளது.
இதனை இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
சினோபார்ம் தயாரிக்கும் கொவிட் சொட்டு மருந்தே, இவ்வாறு வழங்கப்படவுள்ளது.
‘சீனாவும் இலங்கையும் வரலாற்று நட்பைக் கொண்டுள்ளன. கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட விடயங்களில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றன’ எனவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
05 லட்சம் சொட்டு – கொரோனா தடுப்பு மருந்தினை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாளை வியாழக்கிழமை இந்தியாவின் தடுப்பு மருந்து இலங்கைக்கு வருகிறது.