எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், விண்பொருள் பூமிக்கு வரவில்லை

சுமார் 07 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் விழும் என எதிர்வு கூறப்பட்டது.
இந்த பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய ‘அப்பலோ 10’ விண்கலத்தின் பூஸ்டரான, ‘ஸ்நூப்பி’ யின், பாகமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது, செக்கனுக்கு 11 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கியதாக விழும் இந்த மர்மப் பொருள், பூமியின் கடல் மட்டத்துக்கு மேல் 80 கி.மீ தொலைவில் வெடித்துச் சிதறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது நிலத்தை வந்தடையும் சந்தர்ப்பம் குறைவு என்ற போதிலும், நிலமட்டத்துக்கு நெருக்கமாக நெருப்புக்கோளம் தென்படும் என்று எதிர்வு கூறப்பட்டது.
இந்தப் பொருள் விழுவதை அவதானிக்க, ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவொன்று மாத்தறை பகுதியில் முகாமிட்டுள்ளது.
இதேவேளை, ருகுணு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழுவொன்றும் இந்தக் குழுவினருடன் இணைந்துள்ளது.
இருப்பினும் விஞ்ஞானிகள் ஏற்கனவே எதிர்வு கூறிய நேரத்திற்கு, மேற்படி விண் பொருள் விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடை வழியில் எரிந்திருக்கலாம்
இதேவேளை, WT1190F என்ற விண்பொருள், பூமியை வந்தடைய முன்னர் வளிமண்டலத்திலேயே, எரிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை சந்தேகிக்கின்றனர்.
மேற்படி விண்பொருள் இன்றைய தினம் விண்ணில் இருந்து விழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசங்களில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதோடு, அப்பகுதியில் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தற்போது வரையில், விண்பொருள் பூமியினை வந்தடையவில்லை.