சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய

🕔 December 19, 2020

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஒன்று இருப்பதாக அறிகின்றோம் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்;

“சமூக ஊடகங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள பாரிய முரண்பாடு வேறுபாடுகள் காரணமான அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு உண்டு.

இதற்கமைவாக அனைத்து சமூக ஊடகங்களும் அதாவது பேஸ்புக் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோரை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் எமது அமைச்சில் தயாரித்துள்ளோம். சமூக ஊடகங்களுக்கு மாத்திரமே இதனை நாம் தற்பொழுது தயாரித்துள்ளோம்.

சுயகட்டுப்பாடு தொடர்பில் நான் முன்னர் 2010ஆம் ஆண்டில் முயற்சித்தேன். அப்பொழுது அமைச்சராக இருந்த வேளையில் நான் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தேன். பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன். எதிர்வரும் திங்கட்கிழமையும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்னெடுக்கவேண்டிய காலத்தின் தேவையும் ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்