கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு
கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிக்கை தெரிவிக்கின்றது.
சமூகத்திற்குள் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது கட்டாயம் என சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திவுலபிட்டி, வெயங்கொட மற்றும் மினுவங்கொட ஆகிய பகுதிகளில் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாத போதிலும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிக்கு அமைய செயற்படுமாறும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
வீடுகளிலிருந்து வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக கவசத்தை அணியுமாறும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அடிக்கடி கைகளை கழுவுதல் அத்தியாவசியம் என்பதுடன், நெருங்கி பழகுதலை தவிர்த்துகொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.