பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்; தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு
பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட 59 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஹொரண பொலிஸில் பணிபுரிந்த உப பொலிஸ் பரிசோதகர் கே. சுனில் பெரேரா என்ற நபர் இன்று செவ்வாய்கிழமை சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது, குறித்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக நீதிமன்றில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போன மோட்டார் சைக்கிள் ஒன்று தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த பெண்ணிடம் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.