அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில், வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் இருந்த பல்வேறு விடயங்கள், 20ஆவது திருத்தத்தின் மூலமாக நீக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று 19ஆவது திருத்தத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை, 20ஆவது திருத்தம் மீண்டும் வழங்கியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் 19ஆவது திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஜனாதிபதியின் பதவிக் காலம் போன்றவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய அரசியலமைப்பை உருவாக்க – காலம் செல்லும் என்பதனால், அதற்கிடையில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, குறுகிய காலத் தேவையாக, 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார்.