வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார்

🕔 August 19, 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் நாளை கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கொழும்பு வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி பிள்ளையான் சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தாக்கல் செய்யப்பட்ட இந்த நகர்த்தல் பத்திரம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ். சூசைதாஸினால் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நகர்த்தல் பத்திரத்தில் கோரப்பட்டதற்கு அமைய, நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதி வழங்கிய நீதிபதி, ஏனைய அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்க முடியாது என அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கொழும்பு வெலிக்கட சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிள்ளையான் நாளை காலை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்