நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும், ஒத்தி வைக்க வேண்டும்: ‘கஃபே’ வலியுறுத்தல்

🕔 April 24, 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என ‘கஃபே’ அமைப்பு வலியுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன் நிபந்தனைகள் உள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப பணிகளை தற்போது தொடங்கியிருக்க வேண்டியது முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களை நோக்கும் போது, எதிர்காலத்தில் இன்னும் அதிகமானவர்கள் இனம் காணப்படும் நிலைவரம் நிலவுவதாகவும், அதனால் தேர்தலுக்கான சூழல் உருவாக்கப்படுவது சாத்தியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்கள் – தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழலை ஏற்படுத்துவது நடைமுறையில் கடினமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

சில வேட்பாளர்கள் உணவுப் பொதிகளை வழங்கி தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தேர்தல் விதிகளுக்கு முரணான இவ்வாறான செயற்பாட்டின் மூலம் மக்களே பாதிப்படைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச சார்பு கட்சிகள் மாத்திரமே தற்போதைய நிலைமையை சரிவர பயன்படுத்திக்கொள்வதாகவும் மற்ற கட்சிகளும், குழுக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை கோருவதற்கான சூழல் ஏற்றதாக இல்லை எனக் குறிப்பிட்டுள்தோடு, மேற்குறித்த காரணங்களை மையயப்படுத்தி பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் எனவும் மனாஸ் மக்கீம் கோரியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்