– க. ககிஷாந்தன் –
சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதனை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள, ஒரு வீட்டு தோட்டத்தில் வைத்து, அப்பகுதி தோட்ட தொழிலாளிகளுக்கு ரகசியான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த நபரொவருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், மேற்படி தோட்டத்தினுள் மதுபானம் விற்பனை செய்வதாக வட்டவளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது, இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இதன் போது, விற்பனைக்காக வைத்திருந்த 65 மதுபான போத்தல்களையும் வட்டவளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


