கிழக்கு முதலமைச்சரை தடுத்து நிறுத்திய மாகாணசபை உறுப்பினர்; அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்கான பழி வாங்கலாம்

மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் பெயர், அழைப்பிதழில் சேர்க்கப்படவில்லை என்பதற்காக, பாலமுனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரின் வருகையினை, குறித்த மாகாணசபை உறுப்பினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
‘கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும்’ எனும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை பாலமுனையில் இடம்பெற்றது. பாலமுனை அல் – அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது, இவ் விழாவுக்குத் தலைமை தாங்கிய, அல் – அறபா விழையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் – தனது தலைமை உரையிலேயே மேற்கண்ட குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அல் – அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆப்தீன் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“இவ்விழாவில் பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொள்ளவிருந்தார். நாங்கள் திருகோணமலைக்குச் சென்று, அவரை நேரடியாகச் சந்தித்து, அவருடைய நேரத்தினைப் பெற்றே, இவ்விழாவுக்காக திகதியைத் தீர்மானித்தோம்.
இந்த நிலையில், நாங்கள் நடத்துகின்ற இந்த விழாவுக்காகத் தயாரித்த அழைப்பிதழில், இங்குள்ள மாகாணசபை உறுப்பினரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்காக, குறிப்பிட்ட மாகாணசபை உறுப்பினர், முதலமைச்சரிடம் பேசி, அவரின் வருகையை தடுத்துள்ளார்.
எங்களின் வாக்குகளால் தெரிவான கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்விழாவுக்கு வருவதனை, எங்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர் ஒருவரே தடுத்திருப்பது, பெரும் கவலையான விடயமாகும்” என்றார்.