ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்
மாகாண ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொருத்தமில்லாத நபர்களை நியமித்து, ஆளுநர் பதவியை ஜனாதிபதி சொச்சைப்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 05 மாகாணங்களுக்குரிய ஆளுநர்களை நியமித்தார்.
இது தொடர்பில் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்;
“மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும் கெளரவமான பதவியாக மதிக்கப்படவேண்டியதொன்றாகும். அந்த நியமினங்கள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டும்.
ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் என்ற பதவியையும் அகெளரவப்படுத்தி, இவ்வாறானவர்களை நியமித்து அவரும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்றார்.