பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரைத் தண்டிக்க, புதிய சட்டத்தை உருவாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்
🕔 September 20, 2015
– க. கிஷாந்தன் –
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக, புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக்கோரி, நுவரெலியா மாவட்டத்தில் வட்டவளை கிராம மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வட்டவளை நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொட்டதெனியாவ – படல்கம, அக்கரங்கஹ பகுதியை சேர்ந்த 05 வயதுடைய சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும், நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், பாலியல் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கும், இதற்குரிய சட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும், அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டத்தை – தாம் முன்னெடுத்ததாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.