மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம்

🕔 November 22, 2018

 புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையின் பின்னணியில், ஜனாதிபதியின் சகோதரரும் அரலிய நிறுவனத்தின் தலைவருமான டட்லி சிறிசேன இருந்தார் என்பதை, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு சதியொன்றின் மூலமாக, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணி கூறிவரும் நிலையிலேயே, உதயங்க மேற்படி தகவலை மறைமுகமாகக் கூறியுள்ளார்.

தன்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரையும் கொலை செய்வதற்கான சதித் திட்டம் வெளியானமையினை அடுத்தே, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலக்கியதாக, தனது உரையொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேனவுக்கு உதயங்க வீரதுங்க, பேஸ்புக் ஊடாக தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்து ஒன்றில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கான பின்னணி அம்பலமாகியுள்ளது.

டட்லி சிறிசேனவுக்கு உதயங்க தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்தில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு காரணமாக இருந்தமைக்காக பாராட்டினையும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்