தலைப்புச் செய்திகள்

அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதோடு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை இன்றைய தினம் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிணங்கவே, அவர்கள் இன்று ஆஜராகினர்.

இந்நிலையில்  கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் தலா 01 லட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள்  வெளிநாடு செல்லவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

தனது தந்தையாரான டி.ஏ. ராஜபக்ஷவுக்கு ஞாபகார்த்த அருங்காட்சியகம் நிர்மாணிப்பதற்காக அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகவே, கோட்டாவுக்கு எதிராக குற்றம் சாட்டிப்பட்டுள்ளது.