தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சிமைப்பதில் இணக்கம்: மு.கா. ஊடகப் பிரிவு தெரிவிப்பு
– அஹமட் –
உள்ளுராட்சி சபைகள் சிலவற்றில் கூட்டாட்சி அமைக்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடத்தி, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனாலும், கல்முனை மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்து குறித்து வெளியான தகவலொன்றினை மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நிராகரித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கல்முனை மாநகர சபையில் மு.கா. ஆட்சியமைக்கவுள்ளதாக ஏற்கனவே வெளியான தகவலொன்று தொடர்பில், ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர் – பிரதிமைச்சரிடம் கேட்டபோதே, அந்த தகவலை அவர் நிராகரித்திருந்தார்.