தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம்

🕔 November 28, 2017

– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு தற்போது வருடமொன்று வழங்கப்படும் ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல், பத்து லட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ‘செழிப்பான  எதிர்காலத்தை நோக்கிய ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஆறாவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு மாநாடு இன்று செவ்வாய்கிழமை, பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராசிரியர்  நாஜீம் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

செழிப்பான எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கு ஆய்வு ரீதியான முன்னெடுப்புகள் மிகுந்த வலுச்சேர்க்கும் என்பதால், குறித்த துறைக்காக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஏனைய பல்கலைக்கழகங்களுடன் போட்டியிடும் அளவுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தங்களது ஆய்வுகளை இங்கு சமர்ப்பிப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. எதிர்காலத்தில் இதைவிட அதிகமான ஆய்வறிக்கைகளை இந்தப் பல்கலைக்கழகம் முன்கொண்டுவரும் என்று நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரயோக விஞ்ஞான பீடம் எதிர்காலத்தில் பட்டப்பின்படிப்புக்கான வாய்ப்புக்களை இப்பிராந்திய மாணவர்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட உபவேந்தர், அதற்கான முன்மொழிவுகளை இங்குள்ள சிரேஷ்ட கல்வியாளர்கள் வழங்கினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் உரையாடி உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

நிகழ்வின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் இ.எம்.ஜே.எம். றிஸ்வியின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக வன ஜீவராசிகள் மேன்பாட்டு அமைச்சின் ஆலோசகர் வைத்திய ஜோதி பேராசிரியர் சரத் விமல பண்டார கொட்டகம கலந்துகொண்டு ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேன்டிய யுக்திகள் தொடர்பில் உரையாற்றினார்.

இடம்பெற்ற ஆய்வு மாநாட்டுக்கு 33 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஆய்வு மாநாட்டின் செயலாளராக ஏ. மன்ஜீவன் செயற்பட்டார்.

நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், பீடாதிபதிகள்,  திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பிரதிப் பதிவாளர், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தோருக்கு வருகை தந்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்