மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில்
மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு, சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இரவு மேற்படி கூட்டம் இடம்பெற்றது.
இந்த நிலையில், சுதந்திரக் கட்சியுடன் இணைய வேண்டிய தேவை ஒன்றிணைந்த எதிரணிக்குக் கிடையாது என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுவதற்கு, சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இணக்கம் காணப்பட்டதை, முன்னாள் பிரதமர் தி.மு. ஜெயரத்ன ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாதிருப்பதற்காக, செய்ய முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.