கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

🕔 October 27, 2017

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக  இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்வது வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் பாற்பண்ணைக் கைத்தொழில் துறைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளமையினை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் கால்நடைகளை ஏற்றிச் செல்வது  தொடர்பில் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்கும்வரை அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக ஜனாதிபதியினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளர்களினூடாகவே வழங்கப்படுகின்றன.

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்லும்போது ஏற்படுகின்ற பாரதூரமான விபத்துக்கள், உயிர்ச்சேதங்கள் குறித்தும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் குறித்தும்ட கடந்த காலத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் சம்பவங்கள்  பதிவாகியுள்ளன.

நேற்றைய தினமும் அநுராதபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு யுவதிகள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்