மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு
சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது.
சோமாலிய தலைநகர் மொகாதிஷுவிலுள்ள சபாரி ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இந்தப் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு லொரிகளில் வைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகள் வெடித்தமையினால், அருகிலிருந்த கட்டடங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன.
இந்நிலையில் மேற்படி வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 300 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
அல் கொய்தாவின் துணை அமைப்பான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த தாக்குலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை.
கடந்த 2007-ம் ஆண்டு முதல், சோமாலிய அரசாங்கத்துக்கு எதிராக தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும், சோமாலிய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடந்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும் என்று, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் ஒமர் தெரிவித்தார்.