முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி
– முன்ஸிப் அஹமட் –
முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில், ஜப்பார் அலியும் அவருடன் பயணித்தவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
தனது சொந்தப் பிரதேசமான நிந்தவூரிலிருந்து, கிராமசேவை உத்தியோகத்தரான பரீட் என்பவருடன் தன்னுடைய காரில் ஜப்பார் அலி பயணித்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது காயமடைந்த ஜப்பார் அலி – கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஜப்பார் அலியுடன் பயணித்தவர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பிரான ஜப்பார் அலி, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிஸாமின் சகோதரருமாவார்.