வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 07 பேருக்கு இன்று புதன்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தலைமையிலான, ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் (2வது சந்தேகநபர்), பூபாலசிங்கம் தவக்குமார் (3வது சந்தேகநபர்), மகாலிங்கம் சசிதரன் (4வது சந்தேகநபர்), தில்லை நாதன் சந்திரதாசன் (5வது சந்தேகநபர்), பெரியம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் (6வது சந்தேகநபர்), ஜெயநாதன் கோகிலன் (8வது சந்தேகநபர்) மற்றும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் (9வது சந்தேகநபர்) ஆகிய ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட இருவர், குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புங்குடுத்தீவு மாணவி வித்தியா கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி, வன்புணர்வுக்கு உள்ளாளக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய ஒன்பது பேர் எதிரிகளாக இனங்காணப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவர்களில் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, குற்றவாளிகள் ஏழு பேருக்கும் மரண தண்டனைளுயுடன் 30 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வித்தியாவின் குடும்பத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் தலா 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.