கிழக்குத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அணிகள், இணைந்து போட்டியிடும்: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

🕔 August 16, 2017
– ஆர். ஹஸன் –

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றினை அமைக்கும் பொருட்டு, மைத்திரி மற்றும் மஹிந்த அணிகள் இரண்டும் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளன பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வியூகங்களையும் – கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம். சுதந்திரக் கட்சி மைத்திரி அணி – மஹிந்த அணி என இரண்டாக பிளவுபட்டு போட்டியிட்டால் அது எமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தரப்பும் ஒற்றுமைப்பட்டு செயலாற்றவுள்ளோம்” என, அவர் இதன்போது விபரித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனக் கூட்டம்; அதன் தலைவர் ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண ஆளுனர் ரெஜினல் குரே, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் நஜீப்.ஏ.மஜீத், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உட்பட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“பதவிக்காலம் நிறைவடையும் கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளினதும் நிர்வாக காலத்தை நீடிக்காது, அவை கலைந்தவுடன் மாகாண சபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எடுத்துரைத்துள்ளோம். 

எனவே, நாங்கள் விரைவில் எதிர்கொள்ளவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலுக்கு தயாராக வேண்டும். இத்தேர்தலானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மிகுந்த சவால் மிக்கதாக அமையும். சவால்களை முறியடித்து எவ்வாறு வெல்வது என்பது குறித்து நாங்கள் இப்போதே ஆராய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த அணி – மைத்திரி அணி என பிரிந்துள்ளமை இரு தரப்பு முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் பாதிப்பாக அமையும். அத்துடன் நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, சு.கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவது என்பது கடினமானதாகும்.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர், முதல் இரண்டு மாகாண சபைகளின் ஆட்சியையும் ஐ.ம.சு.முன்னணிதான் கைப்பற்றியது. எனினும், துர்திஷ்டவசமாக தற்போது அதிகமான ஆசனங்களை நாங்கள் வைத்திருந்தும் எதிர்க்கட்சியிலேயே அமர்ந்துள்ளோம்.

சவால்கள் நிறைந்த எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வியூகங்களையும் – கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் மஹிந்த அணி – மைத்திரி அணி என பிளவுபட்டு போட்டியிடப் போவதில்லை. அவ்வாறு போட்டியிட்டால், அது எமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இரு அணிகளையும் இணைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக ஆராய்ந்து வருகின்றோம்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலும் தொகுதிவாரி முறையில் விரைவில் நடத்தப்படும். அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி வாரி முறையில் தேர்தலை நடத்துவதற்கான யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம். எனவே, நாங்கள் அதற்கான தயார் படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்