சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

🕔 August 15, 2017

– எம்.வை. அமீர் –

சா
ய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நேற்று திங்கட்கிழமை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமைலான குழுவினரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் றிசாட் மற்றும் கலாநிதி ஜெமீல் ஆகியோரிடம் அமைச்சர் பைசர் முஸ்தபா இதன்போது கூறுகையில்; சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை இம்மாதம் கடைசி வாரத்துக்குள் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடவுள்ளோம். மேலும், எனது அமைச்சின் செயலாளருக்கு இதுவிடயமாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன்” என்றார். 

மேலும் அண்மைக்காலமாக முகநூல்களிலும் பத்திரிகைகளிலும்  சாய்ந்தமருது உள்ளூராட்சிசபை சம்பந்தமாக பலரும் உரிமை கோரும் தகவல்கள் பரிமாறப்படுகிறதே என்று, இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் இர்சாட் ரஹ்மத்துல்லா அமைச்சர் முஸ்தபாவிடம் கேட்டபோது; “சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்பந்தமாக ஆரம்பம் முதல் இன்றுவரை என்னுடன் தொடர்புடன் இருப்பவர்களும், இதனை உரிமை கோருவதற்கு முழுத் தகுதியுடையவர்களும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனும், ஜெமீலும்தான். இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று ஆணித்தரமாக கூறினார்.

இந்த விசேட கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபை ஆணையாளரும், NEDHA தலைவருமான உமர் காமீலும் கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்