கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

🕔 August 9, 2017

– எம்.வை. அமீர் –

கோலாகலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள், மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்று, அப்பிரதேச மக்கள் கேள்வியெழுபு்புகின்றனர்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள் சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் ஆரம்பித்த கையோடுஅவ்வேலைகள் நிறுத்தக்ப்பட்டுள்ளன. இது ஏன்?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில், இந்த தோணாவின் அபிவிருத்தியும் உள்ளடங்கும். அதிகபட்சமாக மு.காங்கிரசுக்கு வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் எதிர்பார்ப்புகள் எப்போது நிறைவேறும்?

சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தித் திட்டங்களை யார் கண்காணிப்பது? இது விடயாமாக யாரிடம் கேட்பது? வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? இதுவரை எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? ஏனைய வேலைகள் எப்போது ஆரம்பிக்கும்? இவ்வாறான பலகேள்விகள் மக்கள் மத்தியில் உள்ளன.

தோணா அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் கொள்ளையிடப்படுவதாகவும் தேர்தல் ஒன்று வரும்போது மட்டும்தான் இதன் அபிவிருத்தி பற்றி பேசப்படுவதாகவும் விமர்சனங்கள் உள்ளன. குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் றஊப் ஹக்கீம் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருக்கின்றன.

இடைநிறுத்தப்பட்டுள்ள  தோணா அபிவிருத்திப்பணியில் பூரணப்படுத்தப்படாத சில இடங்களில் குப்பைகளை இட்டு தீயிடப்பட்டுள்ளதால், அந்த இடம் சிதைந்த நிலையில் உள்ளமையினையும் காணக்கூடியதாகவுள்ளது. பல மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்ட மேற்படி திட்டம் வீணடிக்கப்படாமல், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.

எதிர்காலத்திலும் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தியானது  தேர்தல் பேசுபொருளாக இருக்காமல், தோணாவை அபிவிருத்தி செய்துள்ளோம் என கூறும் அளவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  றஊப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோர் செயற்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்