அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம்

🕔 July 26, 2017

– றிசாத் ஏ காதர் –

கில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபை கூட்டத்தில் இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கூட்டம், சங்க முகாமைத்துவ சபையின் நிருவாக ஆலோசகர் ரீ. விக்ரமரசிங்கம் தலைமையில் கடந்த சனிக்கிழமை கல்முனை பல்தேவைக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிருவாக குழறுபடிகள் காரணமாகவும், தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்து, சங்கத்தின் முகாமைத்துவ சபையினை கூட்டுமாறு செயலாளர் ஒப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பிவைத்திருந்தார்.

அக்கடிதத்துக்கு அமைவாகவே கடந்த சனிக்கிழமை இக்கூட்டம் இடம்பெற்றதாக நிருவாக ஆலோசகர் ரீ. விக்ரமசிங்கம் தெரிவித்தார்.

இக்கூட்டத்துக்கு முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வஹாப் மற்றும் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

மேற்படி கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

01.  2017.05.01ஆந் திகதிய பொதுச் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சபையானது, தொழிற் சங்க யாப்பு விதிமுறைகளுக்கு அமைய கூட்டப்படாமையை வன்மையாக கண்டிப்பதுடன், தொழிற்சங்க தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்யப்படுகின்றது.

02. தொழிற்சங்க யாப்பின் பந்தி 04, 24க்கு அமைவாக விசேட பொதுச் சபைக்கூட்டத்தை தொழிற்சங்க தலைமைக்காரியாலம் அமைந்துள்ள இடத்தில், சங்க ஆலோசகர்களின் தலைமையில் கூட்டப்படுதல் வேண்டும். இக்கூட்டத்துக்கு சகல தொழிற்சங்க ஆலோசகர்கள், மாவட்டக்கிளை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் கலந்துகொள்ளல் வேண்டும் என பிரகடனம் செய்யப்படுகின்றது.

03. குறித்த எமது தீர்மானத்துக்கு முரணாக  தொழிற்சங்கத் தலைவர் செயற்பட்டால் தாபன விதிக்கோவை அத்தியாயம் XXV க்கு அமைவாகவும், தொழிற்சங்க பொதுவான சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்துக்கு சட்ட நடவடிக்கைக்காக முன்வைக்கப்படும்.

04. பொதுச் சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு புதிய நிருவாகம் தெரிவுசெய்யப்படுமானால் அந்த நிருவாகத்தை ஏற்றுக்கொள்வதுடன், தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இச்சபை ஒரு போதும் உடன்படாது என்பதனையும் தெளிவாக தெரியப்படுத்துகின்றோம்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவராக எஸ். லோகநாதன் பதவி வகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்