தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு
அரசாங்கமானது தேர்தல்களைத் தள்ளிப்போடும் சூழ்ச்சிகளை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது என, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
“நாட்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உட்பட அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் இல்லாது ஒழித்து விட்டது.
அதுமட்டுமல்லாது எமது நாட்டின் பொருளாதாரத்தினை எமக்கேற்றபடி நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்ல முடியாமல், சர்வதேச நாடுகளுக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.
புதிதாக கொண்டு வரப்படவுள்ள வருமான வரி தொடர்பில், தொழிற்சங்கங்களிடம் கலந்துரையாடப்படவில்லை. வருமான வரி குறித்து தொழிற்சங்கங்களிடம் கலந்துரையாடப்பட வேண்டியது மிக முக்கியமாகும்.
ஏதோ ஒரு நாட்டின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டு, அதற்கமைய எமது நாட்டில் வருமான வரி தொடர்பிலான பிரேரணையை கொண்டு வருவதென்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
நாட்டில் குறிக்கப்பட்ட தினங்களில் தேர்தல்களை நடத்துவது பிரதானமாகும், என்றாலும் தற்போதைய அரசாங்கம், தேர்தல்களைத் தள்ளிப்போடும் சூழ்ச்சித்திட்டங்களையே செய்து கொண்டு வருகின்றது.
இத்தகைய செயற்பாடானது மக்களின் உரிமைகளையும், வாக்குரிமையினையும் மீறும் நடவடிக்கையாகும். இதனை நாம் முற்று முழுதாக எதிர்க்கின்றோம்” என்றார்.