நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர்

🕔 July 7, 2017
– பிறவ்ஸ் முஹம்மட் –

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுடன், சர்வமத பிரதிநிதிகள் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியா­ழக்­கி­ழமை இச்சந்திப்பு இடம்பெற்றது.

சமகாலத்தில் தோன்றியுள்ள இன ரீதியான முறுகல் நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது. மேலும், தேசிய ரீதியில் சகவாழ்வினை உறுதிசெய்வதற்காக அரசியல் வாதிகளும், மதத்தலைவர்களும் இணைந்து ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வுடன் எவ்வாறு செயற்படுவது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கட்சிகளின் சார்பில் எதிர்கட்சித் தலைவர் ரா.சம்மந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,  அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்லஸ் தேவானந்தா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்­து­கொண்­ட­னர்.

சர்வமத பிரதிநிதிகள் சார்பில் எஸ்.எம். ஆதம்பாவா மௌலவி, பஸீல் பாரூக், எஸ். தாசிம், அருட்தந்தை ஒஷ்வால்ட் ஹோம்ஸ், வணபிதா க்ளிடஸ் சந்ரசிறி பெரேரா, அருட்தந்தை மேர்வின் பெர்னாண்டோ, அருட்தந்தை நோயல் பெர்னாண்டோ ஆகியோரும், இத்தபானே தம்மாலங்கார தேரர், பெல்லன்வில விமலரத்ன தேரர், நீதியாவேல பாலித தேரர், பானகல உபதிஸ்ஸ,வல்பொல விமலஞான தேரர், ஹொரவல தம்மபோனி தேரர் மற்றும் வைத்திய ஸ்ரீ கே.வி.கே. சிவராஸ் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்