பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை

🕔 June 14, 2017
– பாறுக் ஷிஹான் –

டக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பா. டெனீஸ்வரன் மற்றும் பா. சத்தியலிங்கம் ஆகியோர் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் அவர் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

“இந்த நிலமைக்கு நான் காரணமல்ல. சில அமைச்சர்கள் எம்முடன் ஒத்துழைக்கவில்லை. இந்த விடயத்தை சந்தி சிரிக்க, மன்றில் எடுத்து பத்திரிகைகளில் விளாசிவிட்டார்கள். நடைமுறை மாற்றத்தை உறுப்பினர்களும் மக்களும் விரும்புகின்றார்கள்” என்றும் வடக்கு முதலமைச்சர் தனது உரையில் கூறினார்.

அதேவேளை வடக்கு முதலமைச்சர் உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினர். அவர்களுடன் சேர்ந்து கல்வி அமைச்சர் குருகுலராசாவும் வெளியேறியிருந்தார்.

வடக்கு முதலமைச்சரின் உரையின் பின்னர் சபை 22 ஆம்திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே வேளை அமைச்சர்கள் மீதான   குற்றச்சாட்டு தொடர்பாக,  வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசாவை பேசுவதற்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சபை உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரை பேசஅனுமதிக்க முடியாது. அவ்வாறு பேச அனுமதித்தால் ஏனைய உறுப்பினர்களும் பேசுவார்கள் என சபை உறுப்பினர் அஸ்மின் இதன்போது தெரிவித்தார்.

எனினும் அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் வழங்கினால் நான் பேசுவேன், எங்களுக்கு பேச வாய்ப்பளிக்காவிட்டால் எதிர்க்கட்சியாகிய நாங்கள் சபையை விட்டு வெளியேறுவோம் என, எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா கூறினார்.

இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் ‘எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்’ என்றார்.

இதன்போது, ‘இது ஜனநாயகத்துக்கு முரணான செயல் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஒருதலை பட்டசமாக செயற்படுகின்றீர்கள்’ என அவைத் தலைவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்