நாடகமாடுகிறார் மைத்திரி

🕔 June 10, 2017

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்று இடமபெற்றது.  இதன்போது இந்த இனவாத செயல்களை அரங்கேற்றுபவர்களின் பின்னால் யார் உள்ளனர் என ஜனாதிபதி மைத்திரி கேட்டதாகவும் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மாஹ்; “முன்னாள் ஜனாதிபதியே அதன் பின்னால் இருக்கிறார்” எனக் கூறியதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாட்டில் நடைபெறுகின்ற விடயங்கள் அனைத்தினதும் உண்மைத் தகவல்கள் அந் நாட்டின் புலனாய்வு பிரிவினூடாக, துல்லியமாக குறித்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் சென்றடைந்துவிடும். அண்மையில் இதே கருத்தை அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை நாட்டின் புலனாய்வு பிரிவு மிகப் பலமானது என்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் இன்று இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனவாத செயல்களின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்தால், அதனையும் புலனாய்வு பிரிவினர் இன்று அறிந்திருப்பார்கள்.

அது மாத்திரமன்றி இலங்கையில் நடைபெறும் விடயங்களை ஒரு சாதாராண நாடாளுமன்ற உறுப்பினர் தெரிந்து வைத்திருப்பதை விட, ஒரு நாட்டின் ஜனாதிபதி நன்றாகவே தெரிந்திருப்பார். இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை ஜனாதிபதி விவவுவதே ஒரு ஏமாற்று வித்தையாகும்.

இனவாத செயல்களை அரங்கேற்றுகின்றவர்கள் யார் என கேட்டதும், முன்னாள் ஜனாதிபதி என முஜீபுர் ரஹ்மான் கூறியுள்ளார். தற்போது இனவாதம் தொடர்ச்சியாக நிகழ்வதன் காரணமாக அதற்கு ஆளும் ஆட்சியாளர்களின் அனுசரணை இருக்க வேண்டும் என்பது பலரது சந்தேகம். இந்த இனவாதத்தை முஸ்லிம்கள் தங்களது வாக்குப்பலத்தை காட்டியே தடுத்து நிறுத்த வேண்டும். இதன் பின்னால் உண்மையாகவே முன்னாள் ஜனாதிபதிதான் இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரியை நோக்கி, இதன் பின்னால் நீங்கள் இருப்பதாக எங்கள் மக்கள் தற்போது நம்புகின்றனர் என்ற விதமான பேச்சை அமைத்து, எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதி அணியினருக்கு வாக்கு கிடைப்பது கடினம் என்ற விடயத்தை கூறுவதே இவ் இனவாதத்தை அடக்க பொருத்தமானதாகும்.

அதை விடுத்து முன்னாள் ஜனாதிபதிதான் இனவாத செயற்பாடுகளின் பின்னால் இருக்கின்றார் என்றால், ஜனாதிபதி மைத்திரி இன்னும் முஸ்லிம்கள் எமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற காரணத்தால், இவ்விடயத்தில் பெரிதும் கரிசனை கொள்ளாமலும் விட்டு விடுவார். ஞானசார தேரரை கைது செய்தால் அவர் ஒரு சிறு எதிர்ப்பை சம்பாதிப்பார். முஸ்லிம்கள் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காத போது, பொது பல சேனா மீது கைது வைத்து தனது ஆதரவை ஏன் ஜனாதிபதி மைத்திரி இழக்க வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரி சிறந்த முறையில் நாடகமாடுகிறார். முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களிடம் சென்று வீராய்ப்பு வசனங்களுடன் நாடமாடுவதோடு சேர்த்து, ஜனாதிபதி மைத்திருக்கும் நன்றாக தாளமும் வாசிக்கின்றனர்.

(SLMPF ஊடகப் பிரிவு)

Comments