மதத் தலைவர்கள் அடிப்படை உரிமைகளைத் தடுக்க முயல்கின்றனர்: றிஸ்வி முப்தியின் கருத்துக்கு, பெண்கள் அமைப்பு கண்டனம்
‘முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமானது, அதன் தற்போதைய நிலையில் சிறப்பாகவே எழுதப்பட்டுள்ளது, அதில் மாற்றங்கள் தேவையில்லை.’ என்று, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளமையானது விசனத்தினையும், ஏமாற்றத்தினையும் ஏற்படுத்துவதாக வடக்கு கிழக்கில் செயற்படும் 08 பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பான, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் ஒன்றின் போது, றிஸ்வி முப்தி மேற்படி கருத்தினை வெளியிட்டிருந்ததாவும், அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மதத் தலைவர்கள் சம்பிரதாயங்களை முன்னிறுத்தி அடிப்படை உரிமைகளைத் தடுக்க முயல்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் தமது உரிமை தொடர்பில் இலங்கையில் இரண்டாந் தரக் குடிமக்கள் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்தினைச் சீர்திருத்துவதற்காக 2009 ஆம் ஆண்டில் அப்போதைய நீதியமைச்சரால் அமைக்கப்பட்ட குழுவில், ரிஸ்வி முப்தியும், உலமா சபையின் இன்னொரு மூத்த உறுப்பினரும் அங்கத்தவர்களாக இருந்தனர். உலமா சபையானது, இக் குழுவின் அங்கத்தவரென்ற வகையில், கடந்த எட்டு வருடங்களாக, முஸ்லிம் தனியார் சட்டத்தினுள் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பாக நிகழ்ந்த கலந்துரையாடல்களிற் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில் றிஸ்வி முப்தியின் இக் கூற்றுகளானது, முஸ்லிம் தனியார் சட்டத்தினுள் நிலையான சட்டச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது என்ற தவறான நம்பிக்கையை நோக்கி குழுவையும், தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் முஸ்லிம் சமூகத்தையும் உலமா சபை வழிநடத்தியிருக்கலாமென்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
ரிஸ்வி முப்தியின் இக் கூற்றுகள், இது தொடர்பில் குழு மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தீங்கிழைப்பதாகவுள்ளது.
இச் சமீபத்திய கூற்று, அவர்கள் முன்பு கூறியமைக்கு எதிராகவும், தனியார் சட்ட சீர்திருத்தங்களுக்கு உலமா சபையின் அர்ப்பணிப்பு உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதாகவும் இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்களின் பார்வைகள் எதனையும் பிரதிபலிக்காத முப்தியின் கருத்துகளால், நாம் மிகுந்த மன வருத்தமடைந்துள்ளோம்.
முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தத்தினை ஆதரிப்பவர்கள் மீதான தாக்குதல்களை, குறிப்பாக தனியார் சட்டம் மற்றும் காதிமார் சபை (குவாஸி) அமைப்பினால் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோருக்காகப் போராடும் முஸ்லிம் பெண்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த, சட்ட திருத்தம் மீதான உலமா சபை மற்றும் ஏனைய இஸ்லாமிய குழுக்களின் நிலைப்பாடானது சமீப காலத்திற் பயன்படுத்தப்பட்டது என்பதை எமது அமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இந்நிலையைக் கருத்திற் கொண்டு, அரசு இதிற் தலையிட்டு, 18 வயதை எல்லாக் குடிமக்களுக்குமான திருமணத்துக்குரிய குறைந்தபட்ச வயதாக அறிவித்தல், அரச ஊதியம் கிடைக்கும் பதவிகள் பெண்களுக்குக் கிடைக்கும் நிலையினை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு அடிப்படையான சமரசத்துக்கு அப்பாற்பட்ட விடயங்கள் தொடர்பில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என எமது அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.